கி.பி. 100 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர்.
இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை" என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர்.
இந்த இருண்ட காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும் திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
[தொகு] புவியமைப்பு
"தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.
நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகுமலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.
மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here