Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Wednesday, August 11, 2010

மழை (கவிதை)

பகலை இரவென மேகங்கள் வடிகட்டும்

ஓர் மழைக்கால மாலை..



தோட்டத்துச் செடிகளில்

இலையைக் கழுவிச் செல்லும் நீர்த்துளிகள்

மண்ணில் இறங்கி புதிய மணத்தை பரப்பும்..



பரணிலிருந்து வழியும் மழைத்துளிகள்

சுவர்களின் பரப்பில்

நீர்வரிகளை எழுதிச் செல்லும்..



பாத்திரங்கள் நிறைந்து பெருகும் நீரின் ஓசையுடன்

எங்கிருந்தோ கசிந்து கொண்டிருக்கும்

சுகமாய் ஒரு பாடலோசையும்..



குளிர்காற்று ஆடை வழியே உட்புகுந்து

உடலோடு உயிரையும் சிலிர்க்கச் செய்யும்..



சன்னலோரங்களில் பட்டு சிதறும் நீர்த்துளிகள்

முகத்தில் மோதி

கண்ணீரோடு கலந்து இறங்கும்..



குளிர்ந்த என் உள்ளங்கைகள்

எப்போதும் போல காத்திருக்கும்..



உன் உள்ளங்கை கதகதப்புக்காக..

Friday, August 6, 2010

அடி பெண்ணே !

அடி பெண்ணே !






நீ உன் இமை கதவுகளை

ஒருமுறை மூடித் திறக்கும்

அந்த ஒரு சில நொடிகளில்

நான் என்முகத்தை ஓராயிரமுறை

துடைத்துக் கொள்கிறேன் .,





வள்ளுவன் உன் இதழ்களை

பார்த்தபின்புதான் திருக்குறளை

இரண்டு வரியில் எழுத தொடங்கினானோ ?

என்ற தீராத கேள்விக் கனைகளும்

அவ்வப்பொழுது என்னை

தீண்டி பார்க்கத்தான் செய்கின்றன .





நீ ஒவ்வொரு முறை

என்னை கடந்து செல்லும்பொழுதும்

உன் இதழ்கள் ஊமையாகி போனாலும் ,

உந்தன் பார்வைகள்

சத்தம் போட்டு என்னை நலம்

விசாரித்து விட்டுத்தான் செல்கின்றன .



நீ உன் தோழிகளுடன் பேசும்பொழுது

உன் ஈர இதழ்களில் இருந்து

தெறிக்கும் எச்சில் துளிகள் கூட

எனக்கு பன்னீர் துளிகள்

தெளிக்கப் பாடுவதாகத்தான் உணர்கிறேன் .



நீ என்னுடன் அளந்து பேசும்

அந்த ஒரு சில வார்த்தைகள் கூட

உன்னிடம் அடம் பிடித்துதான்

என்னிடம் வந்து சேர்கின்றன .





நான் உன்னை நேசிப்பதை

மறந்து விடுவேனோ என்ற

கவலை உனக்கு வேண்டாம் .

நான் நேசித்தால்தானே

உன்னை மறப்பாதற்கு .,

உன்னை சுவாசித்துக்கொண்டு

அல்லவா இருக்கிறேன் .,



நான் உண்மையில் மேடை

பேச்சாளன்தான் ஆனால்

நீ அரிதாய் எப்பொழுதாவது உதிர்க்கும்

வார்த்தைகளை கேட்ட மறு நொடியே

ஊமை பேச்சாளனாகிறேன்., ஏன் என்ற

வினாவிற்கு இன்னும் விடை

தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் உன் விழிகளில் .



இப்படி உறக்கத்தில் கூட உளறுக்கின்றேன் .,

உலகத்தில் இதுவரை யாரும்

அறியாத வார்த்தைகள் , புரியாத மொழிகளில்

அழியாத உன் நினைவுகளால் !!!!!!!!!!!



--

உயிரே.. (கவிதை)

ஒரே ஒருமுறை முகம் காட்டு


நினைத்துக் கொண்டிருக்கட்டும் மனம்



எதையேனும் உன் பெயராய் சொல்

உச்சரித்து ஓயட்டும் வாய்

எப்போதும் போல் மௌனம் பேசு

கேட்டு சலிக்கட்டும் காது



நாளொருமுறை என்னைக் கடந்துபோ

உன் வாசம் தேடி சூடாகட்டும் மூச்சு



எதையேனும் விட்டுச் செல்

பத்திரப்படுத்தட்டும் கைகள்

ஏதேனும் வழிசொல்லி வரச்சொல்

நடந்து தேயட்டும் கால்கள்

இதழ் மூடாது புன்னகை செய்

எண்ணி உதிரட்டும் விரல்கள்



எப்போதேனும் சில பார்வைகள் பார்

உருகித் தேயட்டும் உடல்



அடிக்கடி என்னை விட்டு விலகிச் செல்

அதற்கு காதல் என்று பெயரி்ட்டு காத்திருக்கிறேன்

Wednesday, August 4, 2010

நட்பு

என் மௌனம் பற்றி நீயும்


உன் மௌனம் பற்றி நானுமாய்

சில நேரங்களில் பதில்களற்ற

கேள்விகள் மட்டும்

நம் இருவரின் புன்னகையிலும்

அவ்வப்பொழுது தோன்றி

தொலைந்து போகிறது.





“தா“ என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,

“வலி“ என்று சொல்லுமுன் விழிகள் அழுது

உனக்காக நானும், எனக்காக நீயுமாய்

உறவாடிய நட்பின் இனிய கணங்களில்

மகிழ்ச்சியாய் கடந்துபோனது காயப்படாமல்

நமது உறவின் முதல் வருடமும் .





உன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்

மௌனத்தின் மொழி இவ்வளவு

தெளிவாகக் கேட்கும் என்பதை

உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .





பாதி ஓவியம் தீட்டி

களைத்துப் போன

தூரிகையின் பெரு மூச்சாய்

எப்பொழுதும் நமது மறு

சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் .





எல்லோருக்கும் இல்லை என்ற போதும்

எனக்கு மட்டுமான தேவைகளை

நான் கேட்காமல் வாரி இறைத்துவிடுகிறது

நமது நட்பில் பிறக்கும் வார்த்தைகள் .





சந்தோசத்திலும் ஒரு சோகம்

சோகத்ததிலும் ஒரு சந்தோசமென

அனைத்தையும் ஒன்றாய் ரசிக்க வைக்கிறது

நம் இருவருக்கும் இடையிலான

நட்பென்ற உறவு .





தாய்மடி இல்லையென்றபோதும்

உன் தோழமையின் அரவணைப்பில்

உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்

மெய்மறந்து சிறு குழந்தையாய் .





ஆயிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்

ஏனோ தனிமையில் இருப்பதாய்

தவிக்கும் இந்த உள்ளம் .

உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்

இந்த உலகமே அருகில் இருப்பதாய்

உள்ளுக்குள் துள்ளும்





தினமும் என்னைப் பற்றி நீயும்

உன்னைப் பற்றி நானும்

நலம் விசாரித்து சிதறிச்செல்லும்

புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்

சிரித்துக்கொண்டு இருக்கின்றன

சாலையோரப் பூக்கள் .





ஒவ்வொரு இரவின் இடைவெளிகளிலும்

உன்னை மீண்டும் சந்திக்கப்போகும்

அந்த நிமிடங்கள் எண்ணியே பசியின்றி ,

தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்

இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது

உன் நட்பின் நினைவுகள் .

மீண்டும் நம் நட்பைக்கொண்டாட

எதற்க்கு இந்த வருடம் என்னும்

நீண்ட இடைவெளி..??

வா தோழா இன்றே தொலைத்துவிடுவோம்

நமது நட்பிற்குள் இந்த வருடத்தை

நிரந்தரமாக.



காதல் கொண்ட உள்ளத்தின்

எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்

கற்பனைகள் நிரம்பி வழிகிறது

இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .





நானும் நீயும் சுவாசிக்கும்

ஒவ்வொரு கணமும் நம் அனுமதியின்றியே

நம் இதயங்கள் உள்ளுக்குள்

நம் நட்பை கொண்டாடிக்கொண்டே இருக்கட்டும்

இனி வரும் நாட்களில்...

Saturday, July 31, 2010

காதலும் கூட விதைக்கப்படுகிறது

“என் நினைவுகள் உன் நினைவின்றி வேறல்ல


என் வழிகள் உன் வழியின்றி வேறல்ல”

துணைக்குத் தனிமை..

அசைபோட அவள் நினைவு..

எனது பேச்சு எப்போதும்

அவள் மௌனத்தைப் பற்றியதே..



“நான் உன்னை மறப்பதில்லை

என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்”



அர்த்தமற்ற சிரிப்புகளின் தொகுப்பாய்..

உளறல் வார்த்தைகளின் அர்த்தமாய்..

காகிதம் நிரப்பும் கவிதைகளின் காரணியாய்..

அவள்

ஏதுமின்றி நான்..

“நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை

உன்னைக் கைவிடுவதும் இல்லை”



என் கல்லறை வாசகமாய்

எழுதிவைத்திடுங்கள் அவள் பெயரை..

எனக்கான நல்ல விளக்கம்

வேறு இருக்க முடியாது



“அழிந்தவையாக புதைக்கப்படுவதெல்லாம்

அழியாதவையாய் எழுந்திரிக்கும்”

காதலும் கூட

புதைக்கப்படுவதில்லை..

விதைக்கப்படுகிறது

நானும், இவளும், அவளும்... (கவிதை)

ஒவ்வொருமுறை கொசுவர்த்தி சுருளின்


சாம்பல் உதிர்ந்து விழும்பொழுதும்

சற்றே பிரகாசமாய்

இவள் முகம்



எங்களின் இன்பக் களியாட்டத் தருணங்களின்

பெருமூச்சுக் காற்றின் ஓசைக்கிடையே

எழும் பேச்செல்லாம்

அவளை பற்றியதாகவே இருக்கும்



அவளது அழகு..

அவளது பார்வை..

அவளது ஈர்ப்பு..

அவளது காதல்..

இப்படியாக..



அவளிடையே எனக்குள்ள காதலின் நெருக்கம்

இவளிடையே எனக்குள்ள இடைவெளியி்ல் விளக்கப்படும்



எங்களின் காதலின் ஆழம்

இவளின் ஆழத்தில் அறிவிக்கப்படும்



இப்படித்தான்

அவள் மீதுள்ள எனது காதல்

இவளுக்கு சொல்லப்பட்டது.. படுகிறது

Thursday, July 22, 2010

KAVITHAI

வாழை மரம்

கிழிந்த சட்டையுடன்

நிமிர்ந்து நிற்கிறது

வாழை மரம்



கவிஞன்

காலத்தை காகிதத்தில்

கட்டி வைப்பவன்

கவிஞன்



வியர்வை

வறுமையை கழுவ

புறப்படும் நதி

வியர்வை



விரல்கள்

நெம்புகோல் பத்து

உன்னில் உண்டு

விரல்கள்



வயல்கள்

என் காதலியின்

முந்தானை

வயல்கள்



நூலகம்

அனைத்தும் இருந்தும்

வருவோர் குறைவு

நூலகம் .