அன்புள்ள அப்பாவிற்கு
என்னுள்
காதல்புகுந்துவிட்டதெனக்கூறி
கவலையுற்றதாக
அம்மா கூறினார்.
தண்டிப்பதும்,
கண்டிப்பதுமே
பாசமென்று
தப்பாக நினைத்திருக்கும்
தந்தையே!
மனம் திறந்து எழுதுகிறேன்
மடலை - ஒரு
தோழனைப்போல்
தொடர்ந்து வாசிக்கவும்.
உண்மையென்பதை-முதலில்
ஒப்புக்கொள்கிறேன்.
கந்தகத்தோடு
விளையாடப்போவதாய்
கவலையுறவேண்டாம்!
காதலென்ன
போர்க்குணமா
புறக்கணிப்பதற்கு?
பூக்களம்தானே!
புல்லாங்குழலுக்குள்
புகுந்த காற்றாய்
காதல் என்னை
புதுப்பித்துள்ளது.
உங்களைப் பார்ப்பதையே
தவிர்த்துவந்த எனக்கு
இப்போதெல்லாம்
உங்கள்
தோள்மீது துயிலவேண்டுமென்று
தோன்றுகிறது.
பூ வேண்டி மட்டுமே
ரோஜாச்செடியிடம்
சென்றுவந்த நான்
இப்போதெல்லாம்
உடைந்த சட்டியில்
செடி உட்கார்ந்திருக்கும்
அழகையும்
ரசிக்கிறேன்.
அன்றாட
சுய தேவைகளை
ஆற்றவே
சோம்பேறிய நான்
சில சிகரம் தொடும்
சிரத்தையோடு இன்று
உடையில்
நடையில்
செயலில்
தனித்துவத்தை-எனக்கு
தயார்படுத்தித் தந்தது
காதல்.
கவிதை வாசிக்க
காற்றை ருசிக்க
ஓவியம் ரசிக்க
வானத்தில் வசிக்க
சிறகின்றி பறக்க
சரிந்துகிடக்கும்
சமூகத்தைச் சரிசெய்ய
கற்றுகொடுத்தது
காதல்.
அம்மா உங்களை
அறிமுகம் செய்திருந்தாலும்,
காதல்தான்
உங்களின்
உள்ளூர அர்த்தத்தை
உணர்த்தியது.
என்னுள்
காதல் நுழைந்து
எல்லோரையும்
எல்லாவற்றையும்
நேசிக்க வைத்தது.
காதல்
வாழ்க்கைக்கான
சூத்திரமென்றே
எனக்குத்தோன்றுகிறது.
பணத்தோடு
பகை வந்துவிடக்கூடாதென்று
சந்தோஷத்தோடு
சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
உங்களுக்கு
ஒரே ஒரு வேண்டுகோள்.
மனதுக்குள்
காதலை அனுமதியுங்கள்
அம்மா அப்போது
தேவதையாகத் தெரிவார்
நான்
தோழியாகத் தெரிவேன்!
ஒரு மகளாய்
எழுதுவது மிகைதான்,
தோழியாய்க் கூறுகிறேன்
காதல்
தேவை உங்களுக்கு....
அன்புடன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here